Saturday, February 24, 2018

வரிப்படங்களின் வழி என்னுடைய இயங்கியலை நியமப்படுத்தல் - 1


விரிவான அறிமுகம் (இணைப்பு )

நேரடியான தத்துவப் பரிச்சயம் உள்ளவர்களுக்கான பதிவு (இணைப்பு ) அல்லாதவர்கள் இந்தப் பகுதியை வாசித்து, யோசித்து, சிந்தனை முறையை ஆக்கிக் கொண்டு இதை வாசிப்பது சரியாக இருக்கும்.


இந்தப் பதிவு பழைய இயங்கியல் பொருள்முதல்வாத அடிப்படையான 'முரண்களில் இருந்து இயக்கம்' என்பதைக் கொண்டு எழுதப்பட்டது. இலகுபடுத்தும் நோக்கில் இது நடந்தது. முரணில் இருந்தே இயக்கம் என்பதை எம்முடைய புதிய இயங்கியல் உடைத்து, முரணிலிருந்து மட்டுமல்ல, இயக்கத்திலிருந்தும் இயக்கம் உருவாகும் அதுவே நோக்குகளான மனிதர்கள் முதலியவற்றுக்கு முக்கியமான இயக்கம் என்பதையும் காட்டிவிட்டது. இந்தப் பதிவு அடிப்படைப் புரிதலுக்கு மட்டுமே. 



அறிமுகம்


முழுமை என்பது அதற்கான திசையில் தொடர்ந்து இயங்குதலாகும்

என்னுடைய நியமத்தைப் புறவயமாக்கி பொதுவில் வைக்கிறேன்.

இதுதான் சரி என்று எதையும் திணிக்கும் நோக்கு எனக்கு இல்லை.

இவ்விதமே பலரும் தமது சிந்தனை முறைகளை முடிந்தவரை புறவயமாக்கி, வெளிப்படையாக பொதுவில் வைப்பதன் மூலம் நாம் கூட்டாக மிகத் திருத்தமான சிந்தனை முறைகளுக்கு வந்தடையலாம்.

அவற்றையும் இடைவிடாது புதுப்பித்துக் கொண்டுமிருக்கலாம்.

சோசலிச தத்துவ இயக்கத்தை விஞ்ஞானமாக்க எனக்குத் தெரிந்த ஒரே வழி இதுதான். வேறு இருந்தால் எனக்கு விளக்கி உதவலாம்.

வெறுமனே தத்துவ விதிகளை அன்றி அந்த விதிகளை எவ்விதம் படிப்படியாக உருவாக்குவது என்பதையும் செய்முறையாகவே விளக்கி  எழுதியிருக்கிறேன்.

ஒவ்வொருவரும் தமக்கான தத்துவங்களை உருவாக்கி பொதுவில் வைத்து, இணைத்தே நாம் பேண்தகு சோசலிசக் கட்டத்தை அடைய முடியும்.

தவறுகளைத் திருத்திக் கொள்ளுதல் 



சில வருடங்களுக்கு முன்பாக என்னுடைய துணை நிலாவுடன் உரையாடுகையில் ' காகம், அன்னம் இவற்றில் பிடித்த பறவை' எதுவெனக் கேட்டார்.

நான் 'அன்னம்' என்று சொன்னேன்.

காரணங் கேட்டார்.

'பாலைத் தண்ணீரிலிருந்து பிரித்தெடுக்கிற' (கற்பனைப்) பாத்திரமாகிய அன்னத்தை நல்லதை தேடி எடுத்துக் கொள்வதால் பிடிக்கும் என்றேன் (எடுகோள்: பால் தண்ணீரிலும் நல்லது).

'எல்லாவற்றிலிருந்தும் நல்லதை எடுத்துக் கொள்வது ஒரு மோசமான செயல் அல்லவா?'- கேட்டார்.

தொடர்ந்து சொன்னார்.

"எனக்குப் பிடித்தது காகம். பிடித்த பறவை என்று பொதுவாகக் கேட்டாலும் காகம்தான். அதுதான் சமூகத்துக்கு உகந்த இயக்கத்தை ஆற்றுகிறது."

அந்தக் கேள்வி பதிலில் இருந்து நான் பல விசயங்களைப் புரிந்து கொண்டேன். ஒவ்வொன்றிலுமிருந்தும் நான் பலதைப் புரிந்து கொண்டுதான் என்னுடைய அறிவியக்கத்தை மிக பலமுள்ளதாக அமைத்துக் கொள்ளுகிறேன்.

1. சரி, தவறு என்பது சூழமைவு சார்ந்தது. நான் கருத்துவெளியில் சரியானதைச் சொன்னேன். நிலா சமூக வெளியில் சரியானதைச் சொன்னார்.

2. புறவெளியிலும் என்னுடய கருத்து சரிதான். ஆனால் அந்தப் புறச் செயற்பாட்டை சமூகக் கண்ணோட்டத்துக்கு உட்படுத்துகிற பொழுது அது தவறு. நிலா சொல்லியது போல நல்லதை மட்டும் உறிஞ்சிக் கொள்வது சமூகக் கண்ணோட்டத்தில் மோசமான செயல்.

3. புறச்செயற்பாடுகளைச் சமூகக் கண்ணோட்டத்தில் பார்ப்பது பொருத்தமானது. இந்தச் சமூகக் கண்ணோட்டத்தை வளர்க்கிற திசையில் கருத்து வெளியை (சிந்தனையை)  கவனமாக நகர்த்துவதே சரியானது.

4. என்னுடைய அதிகப்படியான உய்த்தறிதல்களை நான் குறைத்துக் கொள்ள வேண்டும். பாலையும், தண்ணீரையும் பிரித்து எடுக்கிற புறச்செயற்பாடு எனக்குக் கருத்து வெளியை (மட்டும்) நினைவுபடுத்துகிறது என்றால் என்னுடைய சிந்தனை அகவயப்பட்டிருக்கிறது. அதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.  அதற்கான வழிமுறைகளையும் உருவாக்கினேன். தொடரில் பார்க்கலாம்.

5. இந்தப் பாய்ச்சல் உரையாடுகிற எதிர்த்தரப்பைக் குழப்பி விடும். நல்ல உரையாடல்களுக்கு உதவாது. இன்னுமும் எனக்கு இந்தக் குறைபாடு இருக்கிறது.

6. மிகச் சின்ன விசயங்களிலிருந்து நாம் மிகப் பெரிய விசயங்களை ஆக்க முடியும். ஆக்குகிறோம்.

7. சரி தவறு சூழமைவு சார்ந்தது என்பதைப் புரிந்து கொள்கிறோம். குறித்த சூழல், குறித்த பார்வை/தீர்வு. ஆனால் சூழமைவு சார்ந்ததே தீர்வு என்று புரிந்து கொள்வதன் மூலம் ஒரு உள்ளார்ந்த அடுக்கேற்றத்தை நிகழ்த்துகிறோம். எல்லாச் சூழமைவுக்கும் பொதுவான ஒரு விசயத்தை அறிந்தவர்கள் ஆகிறோம்.

8. எல்லாவற்றுக்குமான பொதுப்பண்புகளை இவ்விதம் அறிவது அறிவின் புதிய தளத்தைத் திறக்கும். அறிவு பற்றிய அறிவு போன்ற சுயமுன்னேற்ற, அடுக்கேற்றத் தளங்களைப் பற்றிய மிக வீரியமான இயங்கியல் அடிப்படைகளையும் தொடரில் பார்ப்போம்.

9. தவறுகளை ஏற்று, வெளிப்படுத்தி, தொடர்ந்து திருத்தமடைகிற நோக்குடையவர்களுக்கே இந்தத் தொடர். ஏனையவர்களுக்குப் பயனற்றதும் மன உளைச்சலை ஏற்படுத்துவதுமாக இருக்கும். ஆகையால் தவிர்க்கவும்.

10. நான் எழுதுவதைக் காட்டிலும் எழுதாமல் விடுபவையே அதிகம். ஆகையால் வாக்கியங்களோடு தங்கி விடாமல், தேங்கி விடாமல் என்னுடைய சிந்தனை முறையை அறிந்து அதைக் காட்டிலும் சிறப்பான சிந்தனை முறையை அடைய வேண்டுகிறேன். முடிவுகள் மட்டுமல்ல, முறையும் தொடர்ந்து மாறிவரும், வர வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

11. அவரரவருக்கு வேண்டியளவுக்கு நேரமெடுத்து இயங்கியல் முறையை புரிந்து கொண்டு என்னுடன் உரையாட முனையுங்கள். அல்லது என்னுடைய நேரத்தைச் சுரண்டுகிற, உழைப்பைச் சுரண்டுகிற செயற்பாடாக அது இருந்து விடும்.


தத்துவச் சிந்தனை


தத்துவச் சிந்தனை பரும்படியானது. இறுக்கமாக உதாரணங்களை, குறித்த விசயங்களைத் தொடர்பு படுத்திக் கொள்ளாமல் மிகப் பரந்த சிந்தனை முறையாக அதை அணுகி அங்கிருந்து திட்டமான விசயங்களை நோக்கி நகர வேண்டும்.

கீழுள்ள வரிப்படத்தில் (1) கருத்துக்கள் புள்ளிகளாக இருப்பின், அல்லது மூளையின் சேமிப்புப் பொதிகளாக இருப்பின் கணித விஞ்ஞான இயக்கம் இறுக்கமாக, தெரிந்த படிமுறைகளிலிருந்து அடுத்தடுத்தவற்றைக் கோர்ப்பதாக இருக்கும் (more focused). தத்துவம் மிகப் பரந்த (more diffused) சிந்தனை.




                                                         தத்துவச் சிந்தனை   (1)



கலை, படைபாற்றலே ஆகவும் பரந்த, கட்டுப்பெட்டியில்லாத சிந்தனை என்கிற தப்பபிப்பிராயம் உண்டு. அல்ல, தத்துவம் கலையை விடவும் பரந்த சிந்தனையில் விஞ்சியிருக்கும்.

அத்தோடு, கணித விஞ்ஞானமென்றால் குவிந்த பார்வை மட்டும், தத்துவம் கலை என்றால் விரிந்த பார்வை மட்டும் என்று தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.

ஒவ்வொரு கருத்தும், இயக்கமும் தமக்கு 'எதிரானவற்றையும்' தோற்றுவிக்கும் என்பதையும் பார்க்கவிருக்கிறோம்.

நான் இதற்கு இன்ன பண்பு என்று சொன்னால் அதற்கு அந்தச் பொருத்தச் சூழமைவில் அது ஆதிக்க/முதன்மைப் பண்பு என்றுதான் கொள்ள வேண்டும்.

இந்தப் பதிவின் முதன்மைப் போக்கு தத்துவம். அதனால் நான் விஞ்ஞானம் என்று சொல்லுவதை இயற்கை விஞ்ஞானம், தர்க்கம், கணிதம், தொழிநுட்பம், விஞ்ஞான பூர்வமான அரசியல், கோட்பாடாக்கங்கள் இவ்வாறான படிநிலைகளாக புறவயப்படுத்தக் கூடிய அனைத்தையும் உள்ளடக்குகிற ஆகவும் பரந்த கருத்தாகக் கொள்ள வேண்டும்.




கீழிருந்து மேலான விஞ்ஞான இயக்கத்திலிருந்து கிடைக்கிற 'தகவல்களை' வைத்துக் கொண்டு திசை தேடிப் பாய்வதே தத்துவ இயக்கம்.  அது பரும்படியாக இருக்கும். புள்ளிக் கோடுகளில் குறித்திருக்கிறேன்.  விஞ்ஞானத்தைக் காட்டிலும் முந்தியோடுவதாக எப்பொழுதும் இருக்கும்.  அதனால் மேலிருந்து கீழாக விஞ்ஞானத்தையும் பார்த்து ஆராய்கிற பலத்தையும் தத்துவம் பெறுகிறது.


தத்துவ உருவாக்கம் 


மிக அதிக வெளிகளை ஆள வேண்டும் என்பதே தத்துவ உருவாக்கத்தின் அடிநோக்கு.

ஒரு தத்துவத்தை விட இன்னொரு தத்துவம் மேம்பட்டதெனின் முன்னையதைக் காட்டிலும் அது பல சூழமைவுகளை விபரிக்க வேண்டும். முன்னையது விபரிக்கிற அனைத்தையும் தானும் விபரித்து அதற்கு மேலும் உள்ளிணக்கத்தோடு விபரிக்க முடிகிற பொழுது பின்னைய தத்துவம் முன்னையதை வென்று விடுகிறது.

உதாரணத்துக்குப் பின்னவீனவாதத்தைத் தோற்கடிக்க வேண்டுமென்றால் அதனால் ஆளுகிற எல்லாக் கருத்தியலையும் எங்களுடைய தத்துவம் ஆளுகிறது, அதற்கு மேலும் ஆளுகிறது, திருத்தம் கூடியது என்று காட்டியாக வேண்டும்.

'தோற்கடித்தல்' என்பது அழித்தல் அல்ல. அதற்குரிய வெளிகளுக்குள் அதை மட்டுப்படுத்துவதாகும். எல்லாவித கருத்துக்கும், தத்துவத்துக்கும் பொருத்தமான வெளி உண்டு. அதனால் மட்டுந்தான் அவை உருவாயிருக்கின்றன. பொருத்தமற்ற வெளிகளிலான பிரயோகமே பிரச்சினையானது. நமது அறிவியக்கம் பொருத்தமான வெளிகளுக்குள்
பொருத்தமான தத்துவங்களை முடக்கி போடுவதற்கானது.

எதனாலும் முடக்க முடியாத தத்துவங்களைத் தேடுகிறோம்.

எமது தத்துவத்தின் எல்லைக் கோடுகளை மிக அகலமாகப் போட்டுக் கொள்ள வேண்டும். 

ஒவ்வொரு பதத்துக்கும், வாக்கியத்துக்கும் ஆகவும் பரந்த விளக்கத்தைக் கொள்ளுங்கள். சரியான திசையில் அது கோர்வையாக இருப்பதுவும் அவசியம்.

உதாரணத்துக்கு  "அகலமாக" என்றால் இருபரிமாணத்தில் என்று அல்லாமல் எத்தனை பரிமாணத்திலும் அந்தப் பெரிய வெளியைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

மொழி மிக மட்டானது. அதனால்தான் முடிந்தளவுக்கு வரிப்படங்கள் போடுகிறேன்.

சரி, என்னுடைய தத்துவத்தின்  எல்லைக் கோடுகளை மிக அகலமாகப் போட்டுக் கொள்ள வேண்டும்.

எப்படி?

எல்லாவற்றுக்குமான பொதுத்தன்மையைக் கண்டறிந்தால்தான் ஆகவும் பெரிய எல்லைக் கோடுகள் கிடைக்கும்.

எல்லாவற்றுக்குமான பொதுத்தன்மை என்றெல்லாம் ஏதாவது இருக்கிறதா?

இருந்தால் அது எது?

இந்தக் கேள்வியினூடுதான் எல்லா வலிமையான தத்துவங்களும் உருவாகின்றன.

எல்லாவற்றுக்குமான பொதுத்தன்மை என்பதை 'ஆய்வு' ரீதியாக நிரூபிக்க முடியாது. எல்லாவற்றையும் நேரடியாகத் தெரிந்து கொண்டோம் என்றும் சொல்ல முடியாது.  விஞ்ஞானமும் பொதுப்பண்பு தேடுகிறது. தத்துவமும் தேடுகிறது. ஆனால் தத்துவம் முந்திப் பாய்கிறது. தவறாகிப் போகிற தன்மை தத்துவத்துக்கு அதிகம்.  ஆனால் அதற்கு விஞ்ஞானம் மாற்று அல்ல. அதனால்தான் தத்துவ இயக்கம் விஞ்ஞானத்தால் முழுவதுமாகத் தோற்கடிக்கப்பட முடியாததாக இருக்கிறது.



எல்லாவற்றுக்குமான பொதுத்தன்மை இருக்கிறதா என்பது நிரூபணமாகாத ஒன்று.  அதற்காக முயற்சி செய்து பார்க்காமல் இருக்க முடியாது - இது நான் கீழே விபரிக்க இருக்கிற இயங்கியலின் பூச்சிய விதி சார்ந்த முடிவு. 

சித்தார்த்தன் (புத்தர் என்றும் சிலர் சொல்லுவார்கள்) எல்லா உயிர்களுக்கும் பொதுவாக வலியை முன்வைத்துத் தத்துவத்தை ஆக்கினார்.

எல்லாவற்றுக்குமான அடிப்படை 'கருத்து', 'கடவுள்', 'கர்மா' இப்படியும் பல தத்துவங்கள் இருக்கின்றன.

தத்துவங்களால் ஈர்க்கப்பட்டுப் அதை எடுத்து ஆளுகிறவர்களை விடவும் பின் தொடரிகளும் அமைப்புக்களினூடு அடிமைப்படுத்தப்பட்டவர்களுமே மிகப் பெரும்பான்மை.

எல்லாத் தத்துவங்களைத் தேடி அறிந்து அவற்றில் மிகப் பொருத்தமானதை தெரிந்து, விளங்கி, உபயோகப்படுத்துவதென்பது இன்னுமும் மனிதவரலாற்றுக் கட்டத்தில் நடந்தேறாத நிகழ்வு. ஒரு சிலருக்கு வாய்த்திருக்கலாம். புறக்கணிக்கத்தக்க அளவினர் அவர்கள்.

இருக்கிற எல்லாத் தத்துவத்தை விடவும் அதிகூடிய பரப்பை ஆளுகிற, மிகப் பெரிய எல்லைகளைக் கொண்ட தத்துவத்தை எங்கனம் நாம் உருவாக்குவது?

ஆகப் பெரிய எல்லைக்கான பொதுத்தன்மை, அப்படி ஏதாவது இருந்தால் அது என்ன??


இயங்கியலின் பூச்சிய விதி 


இயற்கையிலிருந்து தனித்த, நோக்குள்ள (தன்னுணர்வுள்ள) கூறு (உ+ம் மனிதர்கள்)  தன்னை மேம்படுத்திக் கொள்ள இயற்கையை மாற்றியமைப்பது  தவிர்க்க முடியாத இயக்கம்.

இயற்கையிலிருந்து 'தனித்திருப்பதால்', அதாவது வேறுபடுத்திக் கொள்ள முடிவதால் (தன்னுணர்வு,  இயற்கையை ஆராய்கிற பண்பு உள்ளார்ந்தமாயிருக்கும். நோக்குள்ளது  என்பதால் இயற்கையை தனது நோக்குக்கு ஏற்றபடி வளைப்பதும் உள்ளார்ந்த பண்பு.

இந்தப் பூச்சியவிதியை ஒரு  கூறியது கூறலாக (tautology, or may be it's truism, which states no 'interesting' new fact) அமைத்திருக்கிறேன்.

இதை உடைக்கும் வழிவகைகளும் உண்டு. அதற்கு இயற்கையிலிருந்து தனித்த, நோக்குள்ள கூறு இயற்கையைப் பாதிக்காமல் இருக்க முடிந்த சாத்தியத்தை எதிர் தத்துவம் விளக்க வேண்டும்.

மேம்படுத்திக் கொள்வதென்பது பொருள் (உடல்) சார்ந்தும், சிந்தனை சார்ந்தும் இருக்கலாம். பொருள்முதல்வாதத்தை இது வலியுறுத்தவில்லை. உடலில்லாத சிந்தனை ( transcendentalism etc) இது அவசரப்பட்டு மறுக்கவில்லை.

இயங்கியலிருந்து ஆரம்பிப்போம். பொருள்முதல்வாதம் தேவையா என்பதை தத்துவ வளர்ச்சிப் போக்கில் விளங்கி இணைப்போம். 

மேற்படி 'இயற்கையை மாற்றியமைப்பது  கட்டாயம்'  தவிர இப்போது எங்களிடம்  எந்த முன்முடிபும் இல்லை.

இந்த 'முன்முடிபும்' உள்ளார்ந்தமாயிருக்கிறது, வேறு வழியற்ற நிலையில் கட்டாயமாயிருக்கிறது என்பதே இப் பூச்சியவிதி.

ஏனைய எடுகோள்களையும், கருதுகோள்களையும் இந்த விதி சார்பாகவே அமைக்கிறேன்.

ஆகக் குறைந்த அடிக்கோள்கள்/விதிகளில் இருந்து ஆகக் கூடியதை விளக்கவே இந்த முன்னெடுப்பு.

இந்த விதி எனக்கு மிக முக்கியமானது.


பூச்சிய விதியின் இயக்கம்


இயற்கை/அண்ட இயக்கத்திலிருந்து தனித்த கூறுகளான நாம் (மனிதர்கள் ஒரு உதாரணந்தான், இலகுக்காக அதையே எடுக்கிறேன்),

சூழலை அவதானிக்கிறோம். ஆய்வு செய்கிறோம். சூழலைப் பற்றி முடிவுகள் எடுக்கிறோம். அதை உறுதிப்படுத்துகிறோம். மறுபடி முயல்கிறோம். எதிர்வு கூறுகிறோம். திட்டமிடுகிறோம். தோல்விகளிலிருந்து கற்றுக் கொண்டு திருத்துகிறோம். நாளாந்த வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் இதைச் செய்து கொண்டுதானிருக்கிறோம்.

எதையும் 'முழுமையாக' விளங்கிக் கொண்டுதான் அதைப் பயன்படுத்த முடியும் என்பதில்லை. தெரிந்ததை பயன்பாட்டுக்கு எடுக்கிறோம். பயன்படுத்துகிற போக்கில் அதிகம் தெரிந்து கொள்கிறோம்.

குழப்பத்தில் ஒழுங்கு பிடிக்கிறோம். கீழிருந்து மேலான செயலறிவினூடு அமைப்புக்கள், கோட்பாடுகள் ஆக்குகிறோம். அமைப்புக்கள், கோட்பாடுகள் வழி மேலிருந்து கீழாக புற, சிந்தனை வெளிகளில் இயங்குகிறோம்.

இது பின்னிப் பிணைந்திருப்பதையும் தொடர்ந்து மாறி மாறி, வேறுபிரித்தறிய முடியாத வகையில் நடப்பதையும் அவதானிக்கிறோம்.

இந்தப் போக்கை அவதானித்து நியமமாக்கி விஞ்ஞான முறையைத் தருவித்து பெருமெடுப்பில் இயற்கையை ஆய்கிறோம்.

தத்துவம் என்பது ஆகக் கூடிய சூழமைவுகளுக்குப் பொதுவானதை அறிவதற்கானது.

விஞ்ஞானத்தின் "நோக்கு" இதற்கு "எதிரானது".

தத்துவம் அதிகளவு வெளிகளை ஆளுகிற 'நோக்குடைய' இயக்கம்.
விஞ்ஞானம் ஒவ்வொரு 'தத்துவத்தையும்' (கருதுகோள்) அதற்குப் பொருத்தமான வெளிகளுக்கு மட்டுப்படுத்துவதற்கான புறவய  இயக்கம். 

"நோக்கு" பற்றிய விபரணம் பிற்பாடு.

தத்துவம் விஞ்ஞானம் இரண்டையும் இணைத்தே என்னுடைய நியமத்தை ஆக்கியிருக்கிறேன். இரண்டையும் தனித்தனியாகவும் சேர்த்தும் தெளிவாக விளங்கிக் கொள்வது அவசியம்.

விஞ்ஞானம் பற்றிய ஆழமான பதிவுகளுக்கு.

இயங்கியலைக் கொண்டு விஞ்ஞானத்தை வரையறுத்தல் 

இயங்கியலில் இருந்து ஆரம்பித்தல்



இயங்கியலின் எல்லை 

எல்லையை மிக அகலமாகப் போட்டுக் கொள்ளுகிற விழைவு ஒரு அட்டகாசமான விசயத்தைக் கண்டறிகிறது.

எல்லையை நாம் ஏன் விலகி நகர்த்திப் பெருப்பிக்க வேண்டும், அதற்காகத் தலையை உடைக்க வேண்டும்? அந்தப் பொறுப்பை எல்லையிடமே உள்ளார்ந்ததாய், அதனியல்பாய் கையளித்துவிட்டால் என்ன? 

எல்லையே விலகி நகர்வதாக இருந்தால்?

இயக்க எல்லையாக இருந்தால்?





 

இயற்கை/அண்டத்தின் அனைத்துக் கூறுகளுக்கும் பொதுவான பண்பு இயக்கம் என எடுப்போம். 

இயக்கவெளியை ஆளுகிற தத்துவமாக எனி இதை வளர்த்தெடுப்போம். 

இயக்க வெளிக்கு வெளியில் என்ன இருக்கிறது? அதைப் 'படைத்தது' எது?

படைத்தது, தோற்றுவித்தது, உருளவிட்டது எல்லாமே இயக்கங்களாக (வினைச் சொற்களாக) இருப்பதை கவனிக்கிறோம்.

'படைக்கிற' செயற்பாடு என்று ஒன்றிருந்தால் அது இயக்கவெளிக்குள் வந்து விடுகிறது. அதாவது இயங்கியலின் இயக்க எல்லை "படைப்பாளியை" விரட்டியடித்துக் கொண்டே இருக்கிறது. 

'படைக்கிற' செயற்பாடும் இயக்கவெளிக்குள் வந்துவிடுவதால் அதையும் இயங்கியல் இந்த அடிக்கோளின் படி ஆளவேண்டும்.

இந்த அடிக்கோள் 'இயக்கவெளியாகிய  அண்டத்தின் படைப்பை' தர்க்கரீதியாக மறுத்து விடுகிறது. 

இயக்கம் இல்லாத ஏதேனும் ஒரு கூறைக் கண்டறிகையில் (பொருள், சிந்தனை அல்லது வேறு எதுவாயினும்) இந்தத் தத்துவம்/அடிக்கோள்  தோற்கும். 

இந்தக் 'கண்டறிகிற' செயற்பாடும் வினை/இயக்கம். 

இயக்கத்தினூடாக மட்டுமே அதை அடைய முடிவதால் அதை 'வந்தடைகிற'  வழிகள்/பயணத்தையும்  இயங்கியல் ஆளத் தொடங்குகிறது.

இயக்கவெளிக்கு அப்பால் என்ன இருந்தாலும் அது அண்டத்தில் தோன்றிய, தனித்த நோக்குள்ள ஒரு இயக்கக் கூறுக்கு தொடர்பற்றதாகவும், அந்த இயக்கக் கூறினால் எதையுமே அனுமானிக்க முடியாததாகவும், அடைய  முடியாததாகவும் (அடைவதும் அனுமானிப்பதுங் கூட வினையே) இருக்கிறது.

இயக்க எல்லை இவ்விதம் வளர்ந்து செல்கிறது.

இந்த எல்லையை சதுரம், வட்டம், நீள்வட்டம் என்று வரையாமல் உருவற்று வரைந்திருக்கிறேன். எதையும் இறுக்கிக் கொள்ள வேண்டாமென மறுபடி வலியுறுத்துகிறேன். 



இயக்க எல்லைகளுக்குள் இருப்பவை? 

இயக்க எல்லையை வகுத்து, அனைத்துக்கும் அடிப்படையாக இயக்கத்தைக் கொண்டவுடன் ஒரு உற்சாகம் வருகிறது. 

ஆகவும் பரந்த தத்துவம் உள்ளார்ந்த பண்புகளோடு உருவாவதை உணர முடிகிறது. 

இயக்க வெளிக்கு (இயக்க) எல்லை போட்டாயிற்று. இந்த எல்லைகள் அடைக்கும் வெளியை நிரப்புகின்ற உள்ளடக்கம் பற்றிச் சிந்திக்க ஆரம்பிப்போம்.

இயக்கத்தின் அடிப்படை அலகுகள் என்ன? 


இயக்கத்தின் தோற்றுக் கண் என்ன?

பூச்சிய விதியின் தவிர்க்க முடியாத இயக்கத்தில் - சூழலில் மாற்றத்தைத் தொடர்ந்து அவதானிக்கிறோம். நிலையாய் இருப்பது போலத் தோற்ற மயக்கந்த் தருகிறவையும் அதற்கான முடிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதையும் உய்த்தறிகிறோம். மிக இயல்பான செயற்பாடாக விளங்கியோ, விளங்காமலோ இதைச் செய்து வருகிறோம். 

நாம் அறிகிற அனைத்தும் 'இயங்குவதை' அவதானிக்கிறோம்.

விஞ்ஞானத்தோடு ஒப்பிடுகையில் தத்துவத்துக்கு பலமும் பலவீனங்களும் உண்டு. ஒரு உதாரணம் தொகுத்தறிவு முறை. 

தொகுத்தறிவு முறை விஞ்ஞான முறை அல்ல. ஆனால் தத்துவத்தின் பொதுப்பண்பு கண்டறிதலுக்குப் பொருத்தமானது. ஆழமாகச் சொன்னால் தத்துவம் என்பதே தொகுத்தறிவு முறைதான். 

பூச்சிய விதி/முரணின் படி தொகுத்தறிவே தனித்த தன்னுணர்வுள்ள கூறின் கீழிருந்து மேலான 'இயல்பான' 'அறிவு' இயக்கமாய் இருக்கிறது. 

சரி, இது வரை கண்டறியப்பட்ட (தொகுத்தறியப்பட்ட) எல்லாமுமே இயங்குகின்றன. மாறுதல்கள் 'புலனாவதைக்' கொண்டும் தொகுத்தறிவு முறையில் உய்த்தறிந்தும் இதைச் சொல்லுகிறோம்.   

இந்த மாற்றங்களுக்கான அடிப்படைக் கூறு என்ன? 

ஏற்கனவே சொன்ன விதிகளின் சார்பாக பொதுப்பண்புகளை எடுப்பது சிறப்பு. 

இயங்கியலின் எல்லையும் இயங்குவதாக இருக்கிறது. அது எவ்விதம் இயங்குகிறது எனவும் பார்த்தோம்.

படைப்பாளி "படைத்தார்" என்று படைப்பு எல்லை 'நிலைப்பாடு' முன்வைக்கப்படுகிற பொழுது, இல்லை, படைப்பதுவும் இயக்கம் அதுவும் இயக்க எல்லைக்குள் வந்து விடும் என்று மறுத்தே எல்லை வளர்கிறது. 

நிலையை மறுத்தே இயக்கம் நடக்கிறது. 

நிலைமறுப்பே இயக்கம். 

இயக்கமென்பது நிலைமறுப்புப் படிநிலைகளின் தொடரோட்டம். 

தொடரோட்டமாக இருக்கிறது ஆகையால் நிலைமறுத்து வருகிற புதிய நிலையும் மறுக்கப்படுகிறது.

எல்லாவித இயக்கங்களும் நிலைமறுப்பின் நிலைமறுப்புக்களாக இருக்கின்றன. 


இது தொடர்ச்சியாக நடப்பதால் நிரந்தர நிலை என்கிற ஒன்று கிடையாது.

எமது மேம்போக்கான பார்வைக்கு, புலன்களுக்கு நிலைகளாக (states) தெரிகிறவை எல்லாமும் ஏதோ ஒரு இயக்கத்தின் படிநிலைகளே (part of a process) என்பதை உணரத் தலைப்படுகிறோம். 

இயக்கத்தின் படிநிலைகளே எல்லாவித பொருளும் (சக்தி அடங்கலாக), சிந்தனையும் (கருத்தும்). 

அதேவழியில் சிறிய இயக்கங்களைப் பேரியக்கங்களின் பகுதியாக புரிந்து கொள்ளத் தலைப்படுகிறோம்.

முடிவாக இயக்கம் என்கிற பொதுப் பண்போடு ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட இயக்கவெளிக்  கூறுகளாக அண்டத்தை அடையாளப்படுத்துகிறோம்.

எல்லாமும்  தொடர்புபட்டவை என்பதற்காக வழமையான 'ஆன்மீகத்தோடு', அத்வைதத்தோடு குழப்பிக் கொள்ள வேண்டாம். இவற்றை உடைப்பது குறித்து பிற்பாடு. 

நாம் அனைத்துக்கும் பொதுப்பண்பு இருப்பதை எடுகோளாகவே கொண்டோம். பூச்சிய விதியின் படி தவிர்க்க முடியாத கட்டாயம் இது.

இப்போது இயக்கம் பொதுப்பண்பு, அதானால் எல்லாமும் எல்லாவற்றுடனும் தொடர்பு உடையவை என்பது சுழல் ஏரணமாகத் (circular reasoning)  தோற்றலாம்.

அல்ல. இயங்கியல் வட்டத்தில் இயங்குவதில்லை. அது சுருளிவிற்களாகவே திசைப்பட்ட இயக்கத்தைக் கொள்கிறது. Could do self-referencing (please challenge if not). 

உதாரணத்துக்கு, 

நிலைமறுப்பின் நிலைமறுப்பு வழியில் முடிந்த முடிபென்று எதுவும் இல்லை.

ஆனால் முடிந்த முடிபென்று எதுவுமில்லை என்பது முடிந்த முடிபாகிறது.

ஒரு செயல், கருத்து அதற்கு எதிரான செயல், கருத்தையும் உள்ளார்ந்தே தோற்றுவிக்கிறது. 

ஒன்றைச் செய்கிற பொழுதே இன்னொன்றையும் (பலவற்றையும்) சேர்த்தே செய்கிறீர்கள். 

"முடிந்த முடிபென்று எதுவுமில்லை என்பது முடிந்த முடிபாகிறது"  என்பது ஒரு படியேற்றக் கருத்து.

தன்னைத்தானே படியேற்றிக் கொள்கிற இயக்கங்கள் பற்றிக் கீழே பார்க்கவிருக்கிறோம்.

இது வெறும் கிடைவட்டமல்ல. வட்டவடிவாகத் திரும்புகிற பொழுதே மேல் நோக்கிப் படியேறுகிறது. 

சுருளிவில் இயக்கத்தைப் பெறுகிறது.

வட்ட இயக்கத்தை அடிப்படையிலேயே  மறுத்து  சுழல் ஏரணங்களை (circular reasoning) இயங்கியல் உள்ளார்ந்து வென்று விடுகிறது.

சுழல் ஏரணங்களில் (circular reasoning) சிக்கி மாண்டு போன வழமையான தர்க்கத்தைக் (formal logic) கேலி செய்தே நாம் இயங்கியல் தர்க்கத்தைக் (dialectical logic) கொண்டு வருகிறோம். 

இவ்விதமான படியேற்றக் கருவிகளை நாம் விளங்கிப் பயன்படுத்தத் தொடங்குவது எமது சிந்தனைத் திறனில் பாய்ச்சலைக் கொண்டுவரும். 

இந்தச் சங்கிலித் தொடரைப் பிடித்துக் கொண்டு இயக்கங்களின் மூலத்தை, ஆக்கக்கூறை, ஆகவும் அடிப்படையான கூறை ஆராய்ந்தால் அதுவும் நிலையற்றதாக, முழுத் துல்லியமாக அறியப்பட முடியாததாகவே இருக்கமுடியும். 

இயங்கியலிலிருந்து பருப்பொருளை வரையறுத்தல் 

தத்துவ மொழியில் பொருள் என நான் இப் பதிவில் எழுதுவது பருப்பொருளே.

பொருள்முதல்வாதத்தை இணைப்பதில் நானறிந்தவரையில் எல்லாவித இயங்கியல் கோட்பாட்டாளர்களிடமிருந்தும் நான்  நேரடியாக வேறுபடுகிறேன். இந்தப் பகுதியை மிக அவதானத்துடன் கடக்கவும். 


இயக்கவெளிக்கு அப்பால் நமக்கு அறியமுடியாதிருக்கிறது. இயக்க எல்லை நாம் 'அப்பால்' நகரமுடியாதவாறு எமது சிந்தனை, செயலை எப்பொழுதும் முந்தி நகர்கிறது.  

இயங்கியல் அறிவைக் கொண்டு இந்த இயக்கத்தை முந்தியோட முடியுமா என்பதே எனது தேடல். இயங்கியலை வளர்த்தெடுப்பதென்பது இயங்கியலை உடைப்பதற்கான செயற்பாடே. 

இயக்கவெளிக்குள் இயக்கத்தின் தோற்றுவாயாக முரணையே நாம் கொள்ளுகிறோம். 

முரண் என்பது உள்ளார்ந்தமாக ஒன்றல்லாத நிலையைச் சுட்டுகிறது.

ஒன்று இன்னொன்றாவதன் அடிப்படையாக இருக்கிறது.

முரண் என்பது ஒன்று இன்னொன்றாகிற (நிலை மறுக்கிற) இயக்கப் பண்பு. 

ஒன்று இன்னொன்றாய் மாறுவதில் பொதுப்பண்பு முரண். அது ஒன்றையும் இன்னொன்றையும் வேறுபடுத்துவதில்லை. 

அதனால் ஒன்றையும் இன்னொன்றையும் வேறுபடுத்த குறைந்த பட்சம் இன்னொரு பண்பு இருந்தாக வேண்டுமே? 

அந்தப் பண்பு தனக்கான பண்புகளைக் கொள்ளத்தக்கதாய் இருக்க வேண்டும்.

பண்பேற்றம் பெறத்தக்க பண்பு அது. இதுவும் ஒரு படியேற்றக் கருத்தியல்.

அந்தப் பண்பு 'பொருள்'.

பண்பேற்றம் பெறத்தக்க அடிப்படையான இயக்கப் பண்பை 'பொருளாக' நாம் வரையறுக்கிறோம்.

எல்லாவற்றையும் இயங்கியலிலிருந்து நான் வரையறுப்பதால் என்னுடையது இயங்கியல் பொருள்முதல்வாதம் அல்ல. 


இயங்கியலிலிருந்து அனைத்தையும் (பொருள், சிந்தனை) வரையறுக்கத் தவறின் என்னுடைய இயங்கியல் தோற்கும். 

ஆன்மீகம், பின்னவீனத்துவம், அமைப்பியல், இறையியல் என எதுவாயினும் , அது விளக்குவதை இயங்கியலிலிருந்து விளக்க முடிய வேண்டும். அவை உருவாக்கிய அத்தனை கருத்தியலையும் இயங்கியல் கொண்டும் உருவாக்க முடிய வேண்டும். அல்லது இந்தத் தத்துவத்தின் போதாமை வெளிப்படும். புதிய அடிக்கோள்கள், தத்துவத்தை ஆக்க வேண்டும். அல்லது விதிவிலக்குகளை ஆவணப்படுத்தி அடுத்தவர் செய்ய உதவுவேண்டும். 


பொருள்முதல்வாதம் பற்றிய தவறான புரிதல்

பொருள்முதல்வாதத்திலிருந்து இயங்கியலை (இயக்கத்தை) அணுகுவது மிகப் பின்னடவைவான பிரயோக அறிவற்ற சிந்தனையையே கொண்டு ஏற்படுத்தி வருகிறது.

இது வரைகாலமும் பொருளும் இயக்கமும் சேர்ந்திருப்பதாக, பொருளில் இருந்து இயக்கத்தை அணுகுவதாக மார்க்சியர்கள் தவறான அடிப்படையில் இருந்திருக்கிறார்கள். இருந்து வருகிறார்கள். 

இயக்கத்திலிருந்து பொருளை அணுகுவது பிரயோக திறனில் பெரும் பாய்ச்சல் நிகழ்த்துகிறது.

முதலில் தோன்றியது கருத்தா, பருப்பொருளா எனில் இரண்டுமில்லை. முரணற்ற இயக்கமே முதலில் தோன்றியது.

ஒரு தத்துவத்தை வெல்ல அதைப் பொருத்தமான பிரயோக வெளிக்குள் மட்டறுக்கவேண்டும் என்றேனில்லையா?

கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் இரண்டையும் அவ்விதம் மட்டறுத்து இயங்கியலைப் பழக ஆரம்பிப்போம்.

பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்பவை  கருத்தா, பொருளா முதலில் 'தோன்றியது' என்பது பற்றியதல்ல. 

அவை ஒவ்வொரு கருத்தையும் 'புடம்' போட்டு வேறுபடுத்துவதற்கானது. அவை இயங்கியலின் சிறு கருவிகள். 

இவற்றின் வெளி கருத்து வெளி. செயல் இயக்கத்தைப் பகுத்தல். அவ்வளவுதான்..

குறித்த கருத்தின் இயக்கம், 

பொருள்==> கருத்து.....கருத்து==>பொருளாக இருந்தால் அது பொருள்முதல்வாதச் சிந்தனை.

கருத்து ===> பொருள்.....................பொருள்==> கருத்தாக இருப்பது கருத்துமுதல்வாதச் சிந்தனை. 


அதாவது எங்களது சிந்தனையிலான ஒவ்வொரு கருத்துச் சுழலும் புற அவதானங்களில் ஆரம்பித்து புற ஆதாரங்களால் பொய்ப்பிக்கப்படத்தக்க நிபந்தனைகளில் முடிவடைந்தால் அது பொருள்முதல்வாதச் சிந்தனை.

இடையில் எத்தனை கருத்துநிலைப்படிகளும் இருக்கலாம். சிந்தனை வளர்ச்சியுடன் இவை அதிகரிக்கும். கருத்து பொருளை விட வலிமை பெறும். கருத்து பொருளை முழுவதும் ஆளத் தலைப்பட்டுக் கொண்டே இருக்கும். அத்திசையிலேயே இயங்கும்.  

அப்படி அல்லாதவை கருத்துமுதல்வாதச் சிந்தனைகளும் குழப்ப சிந்தனைகளுமே.

அதாவது வெறுமனே தட்டையாக இருந்து சுழல் ஏரணத்தினுள் மாட்டிக் கொள்ளாமல்  சுருளிவில் இயக்கமாக இருக்க வேண்டும்.

அது மட்டும் போதாது அந்தச் சுருளிவில்லின் அடிப்படை புறநிபந்தனை (பொருள் சார்ந்து) இருக்க வேண்டும். 



பொய்ப்பிக்கப்பட்ட கருத்தைக் காவுவது அறியாமை.

புற நிபந்தனைகள் எதுவும் பொய்ப்பிக்க முடியாத 'நம்பிக்கைகளை' காவுவது அடிப்படைவாதம்/மதவாதம்.

கருத்தை மாற்றாது பொய்ப்பிக்கத் தகுந்த புறநிபந்தனைகளை மாற்றி வருவது பிழைப்புவாதம்.

பொய்ப்பிக்கப் படுகிற புறநிபந்தனைகளை எப்போதும், எதற்கும் வைத்திருந்து கருத்தை அதற்கேற்ப மாற்றுவது அறிவு இயக்கம்.


இயங்கியலில் விஞ்ஞானக் குறியீடுகள் 


விஞ்ஞான மொழியில் சொன்னால், அண்டத்தில் இருக்கிற எல்லாவற்றையும்  குறைந்த பட்சம் இரண்டு விசைகள் தாக்க வேண்டும். 

நிற்க,

'விசைகள்' என்று சொன்னேன். 

விஞ்ஞான வெளியிலிருந்து எண்ணக்கருக்களைத் தத்துவத்துக்கு எடுத்து ஆள்வது எவ்வளவு பொருத்தம்? அதற்கான சரியான முறை இருக்கிறதா? இருந்தால் அது என்ன? 

விஞ்ஞானத்தையும் தத்துவத்தையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. 

பொருத்தமானவற்றை, பொருத்தம் கருதிப் பயன்படுத்தவேண்டும். 

விஞ்ஞான வெளியிலிருந்து ஒரு எண்ணக்கருவை தத்துவ வெளியில் பாவிக்கிற பொழுது அது தத்துவ வெளிக்குரிய பரும்படி விளக்கத்தையே கொள்ளும். பரும்படியாக இருப்பது அதன் குறைபாடாக இருக்கும். அதே சமயம் பரந்ததாகவும் இருந்து பலம் சேர்க்கும்.

விஞ்ஞான தத்துவ தொடர்பைச் சரியாக விளங்கிக் கொள்ளாமல்,

'ஐம்புலன்களால்' அறியத்தக்கது பொருள் என்றெல்லாம் தத்துவ வரையறைகளை அபத்தமாக முன்வைக்கக் கூடாது. 

அண்டத்தில் எழுபது புலனுள்ள தனித்த கூறு எங்கேனும், எப்போதாவது தோன்றினாலும்,  எதிர்காலத்தில் நூற்று இருபதாவது மனிதப் புலனை விஞ்ஞானம் கண்டறிந்தாலும்  தான் தோற்காதிருக்கவே தத்துவம் முயலும். 

வரைவுகள் பரந்த பொருளில் (அர்த்தத்தில்) இருக்க வேண்டும்.

நல்ல தத்துவ உருவாக்கம் அப்படித்தான் இருக்க வேண்டும். 

'இயங்கியல் விஞ்ஞானம்' என்பதில் குழம்பி, இன்றிருக்கிற விஞ்ஞானத் தகவல்களைக் கொண்டு தத்துவ வரையறைகளை ஆக்கக் கூடாது. 

விஞ்ஞான 'முடிவுகள்' (அவை எதுவும் முடிந்த முடிவுகள் அல்ல, நிறுவப்பட்டவையும் அல்ல) தத்துவ வரையறைகளைப் பாதிக்கக் கூடாது

வழிப்படுத்தலாம். தத்துவச் சிந்தனைக்கு உதவலாம். வரைவில் இருக்காது.

'' ஐம்புலன்களால்' அறியத்தக்கது பொருள் ''

பல மனப்பாட மார்க்சிய ஆசான்கள் இவ்விதம் 'கற்பித்துக்' கொண்டிருக்கிறார்கள்.

மார்க்சியத்தை, இயங்கியலைக் 'கற்பிக்க' முடியாது. 

தனக்கான சிந்தனைச் சட்டகத்தை ஆக்கிக் கொண்டு தொடர்ந்து சீர்தூக்கி பார்க்கிற ஒருவரே தன்னுடைய சட்டகத்தையும் மேம்படுத்தி, தத்துவத்தையும் அத் தத்துவத்தை எழுதியவரைக் காட்டிலும் அதிகமாகப் புரிந்து கொள்வார். 

விஞ்ஞானத்தின் கருதுகோள், அவதானிப்பு பகுதிகளை வலிமைப்படுத்துவதாகவே தத்துவம் விஞ்ஞான முறையோடு உறவாட வேண்டும். 





தத்துவத்தை விஞ்ஞானத்தோடு இவ்விதம் இணைப்பதன் மூலம் தத்துவம் இரண்டு பண்புகளைப் பெறும்
- விஞ்ஞான முறையை ஆளும்
- விஞ்ஞான முறையினூடு தன்னையும் விஞ்ஞானமாக்கிக் கொள்ளும் (புறநிபந்தனைகளினூடு பொய்ப்பிக்க அனுமதிக்கும்)

விஞ்ஞானத்தைக் கொண்டே விஞ்ஞான பூர்வமாகிற கீழிருந்து மேலான இயக்கம் அத் தத்துவத்தை விஞ்ஞானங்களின் விஞ்ஞானமாகப் படியேற்றம் செய்கிறது

விஞ்ஞானங்களின் விஞ்ஞானமான இயங்கியலில் இருந்து மேலிருந்து கீழாக விஞ்ஞானத்தை 'திட்டமாக' ஆளுகிற தன்மை விஞ்ஞான வளர்ச்சியுடன் சேர்ந்தே வளரும். விஞ்ஞானத்தை விடவும் வேகமாகத் தத்துவம் வளரும்.


இயக்கவெளியின் ஆக்கக்கூறுகள் 

ஒன்றுக்குமேற்பட்ட விசைகள் தொழிற்படுகிற (முரண்களைக் கொண்ட)  பண்பேற்றம் பெறக் கூடிய பண்பே ( இதை எனி பொருள் என்று குறிப்போம்) இயங்கியலின் அடிப்படைக் கூறு.


இயக்கத்தின் அடிப்படை.





இது வரைக்கும் ஆக்கக் கூறுபற்றி எழுதி வந்ததே வரிப்படமாக இருக்கிறது. 

புள்ளிக் கோடுகளால் இருப்பது சமனும் எதிருமான முரண்கள். அவை அழியும். 

'சமம்', 'நேரெதிர்' என்பன நிலைப்பற்றவை.  

அதாவது ஒன்று அதற்கே சமமானதல்ல. அ=அ என்பது தவறு. அ சமனல்ல அ என்பது இயங்கியல் தர்க்க அடிப்படை.

 வழமையான தர்க்கம் அ=அ ஐ அடிக்கோளாகக் கொண்டது. அதனால் அது சுழல் ஏரணத்தில் மாட்டிக் கொள்கிறது. 

தொடர்ந்து நிலைமாறுகிறவையே எல்லாமுமும். 



மீட்டல், பின்னூட்டல், படியேற்றல் 


இந்த விளக்கத்துடன் நாங்கள் இதுவரைக்கும் சொல்லிவந்தவற்றைஅதிகமாக விளங்குவோம்.

இவ்விதம் மீட்டிப் பார்க்கிற பொழுது எங்களுடைய தத்துவ உருவாக்கம் இந்தத் தத்துவ உருவாக்க செயன்முறையையே (தன்னைத்தானே) வலிமைப்படுத்திக் கொண்டிருப்பதை நாம் உணர முடியும். 

தன்னைத்தானே படியேற்றிக் கொள்கிற இயக்கங்களைப் பற்றி மிக ஆழமாக பார்ப்போம். 

தத்துவ உருவாக்கத்தின் தத்துவம், விஞ்ஞானங்களின் விஞ்ஞானம், சாத்தியக் கூறுகளின் சாத்தியம், வரலாற்றின் வரலாறு, அறிவு பற்றிய அறிவு, சிந்தனை பற்றிய சிந்தனை, ஆய்வு பற்றிய ஆய்வு  என்பதாக எண்ணற்ற படியேற்ற இயக்கங்களை ஆராய்ந்து மிக வலிமையான எண்ணக் கூறுகளை ஆக்கிக் கொள்ளப் போகிறோம். 



நேர்ப்பின்னூட்டங்களை, தன்னைத்தானே உந்தி முன்னேறுகிற கருத்துக்களை ஆக்க முடியும். 

முடிவில்லாது வளருகிற ஒரு இயக்கத்தை எவ்விதம் மறைப்பின்னூட்டம் கட்டுப்படுத்தி 'மறைப்' படி ஏற்றுகிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

உதாரணம் - முடிந்த முடிபு என்று எதுவும் இல்லை (முடிவில்லாத வளர்ச்சியை) - என்பது ஒரு முடிந்த முடிபு (கட்டுப்படுத்துகிற படியேற்றம்).

இரண்டுவிதமான படியேற்றங்களும் 'அறிவை' வளர்ப்பதாகவே இருக்கும். 

இயங்கியல் அறிவுக்குத் தோல்வி என்பது இல்லை. 

இயங்கியலைச் சரியாக உள்ளெடுத்த இயங்கியலாளருக்கும் கருத்து வெளியில் தோல்வி என்பதில்லை. 

இந்தப் பதிவில்  இயங்கியல் விதிகள் என்று சொல்லுவதை விட, முரண்கள் என்று சொல்லுவோம்.

பூச்சியவிதியை, அடிக்கோள் முரண் என்றும் சொல்லலாம். இயங்கியலின் எல்லை என்பதை விட இயங்கியலின் எல்லை முரண் என்பது பொருத்தம். 

முரண்பாடுகளற்ற உள்ளிணக்கமான தத்துவத்தை வரைவுபடுத்து பலர் முயன்று தோற்றிருக்கிறார்கள்.

அந்தத் தோல்வியைத் தவிர்க்க நாம் முரண்பாடுகளையே அடிப்படையாக்கி நம் தத்துவத்தை அமைக்கிறோம்.

இயக்கத்தின் அடிப்படை அலகு சுயமுரண் என்று உள்ளார்ந்தமாக ஏற்படுகிற பொழுது மிக வீரியமான சிந்தனைச் சட்டகமும் அணுகுமுறையும் (தத்துவம்) உருவாகி வருவதை உணர்ந்து மேலும் உற்சாகமடைகிறோம். 

மேலும் வலிமைப்படுத்த தொடர்கிறோம். 

இப்போது  பூச்சியவிதியை  சுயமுரண் அலகுகளால் ஆன,  'தமக்காகத் தாமே' இருக்கிற, வேறு 'நோக்கில்லாத' அண்டத்தை தமது 'நோக்குகளுக்காக' வளைக்கிற செயற்பாடாகப் புரிந்து கொள்ளலாம். 

எனின் 'நோக்கு' எவ்விதம் இயக்கவெளிக்குள் தோன்றியது?


சாத்தியக்கூறுகளின் சாத்தியம்


இயக்கவெளியின் அடிப்படைகள் சுயமுரண்கூறுகள். முழுத் துல்லியம் என்பது சாத்தியமற்றது. 

விதிவசவாதம் (fatalism), நியதிவாதம்/துணிபுவாதம் (determinism)...
இந்தமாதிரியான வாதங்களை இயங்கியல் மிக எளிதாக அடித்து விடுகிறது. 

இயக்கவெளியில் எல்லாமுமே சாத்தியக் கூறுகள்தான். 

சுயமுரண்பாடுகளான ஆக்கக் கூறுகள் தொடர்ந்து இயங்கி, வெவ்வேறு சேர்மானங்கள், இணைப்புக்களை ஆக்கிக் கொண்டே இருக்கின்றன. 

ஒன்றைச் செய்கையில் அதற்கு எதிரானதும் (எதிரானவையும்) நடந்தேறும் என்று பார்த்தோம்.

இயக்கமும் அதனளவில் விதிவிலக்கல்ல. 

இயக்கம் அதாவது நிலைமறுப்பின் நிலைமறுப்பே நிலைகளையும் ஏற்படுத்துகிறது. 

இயங்குகிற பண்பு இயங்காதிருக்கிற பண்பையும் தோற்றுவிக்கிறது. 

இயக்கத்தை எதிர்த்து இயக்கக் கூறுகள் சண்டித்தனம் செய்கின்றன. அது இயக்கத்தின் உள்ளார்ந்த பண்பே அன்றி 'நோக்கு' அல்ல. 

இயக்க அலகுகள் பல்வேறு சேர்மானங்களில் இயக்கத்தை எதிர்க்கிறவையாக தேக்கங்களாக மாறுகின்றன. 

திண்மம், திரவம், வாயு, சக்தி, சடம்  என்றெல்லாம் நாம் பகுத்துக் காண்கிற எல்லாவித நிலைகளையும் இயக்கம் எடுக்கிறது.

இயக்கம் தனது பண்புகளுக்கான எதிர்ப்பண்புகளையும் தோற்றுவிப்பதால்,

எதுவும் சமம் அல்ல என்றாலும், 'சமம்' போன்ற தோற்றப்பாடுகள் ஏற்படுவதைப் பார்கிறோம். எதுவும் துல்லியமாகச் சமமல்ல. இருந்தாலும் 'போதுமான' சமநிலைகளைப் பார்க்கிறோம்.

சுயமுரண்பாட்டு ஆக்கக் கூறுகள் எழுமாற்றாக இயங்கிக் கொண்டிருப்பதாகப் பார்த்தோம். ஆனால் வேண்டிய அளவுக்கு பல 'ஒழுங்கான' விசயங்களையும் நாம் சூழலில் காண்கிறோம். 

எழுமாற்றிலிருந்து ஒழுங்கு வருவதையும் பூச்சிய விதியின் இயக்கத்தில் கண்டிருக்கிறோம். ஒழுங்கைக் கொண்டுதான் நாம் கோட்பாடு, விதிகளை ஆக்குகிறோம். 

முரண் என்பது ஒன்று இன்னொன்றாகிற (நிலை மறுக்கிற) இயக்கப் பண்பு. 

பொருள் என்பது பண்பேற்றம் பெறுகிற இயக்கப் பண்பு என்று நான் வரைவு செய்து கொண்டேன்.

பொருள் இயக்கத்துடன் பண்பை மாற்றிக் கொண்டே வருகிறதை 'முதலில்' அவதானிக்கிறோம்.

அரதப் பழைய உதாரணம் - வெப்பநிலையுடன் பனிக்கட்டி உருகி, திரவமாகி, கொதித்து ஆவியாகுவது. 

வெப்பம் (சக்தி - பொருளின் ஒரு நிலை) உடன் வெப்பநிலை (பொருளின் ஒரு பண்பை அளவிடுகிற அலகு) அதிகரித்து, அதாவது இயக்கம் அதிகரித்து நீர் (பொருளின் ஒரு நிலை) புதிய பண்புகளை எடுத்துக் கொள்கிறது. 

ஒரு பண்பு 'அதிகரித்து' இன்னொரு பண்பாக மாறுகிறது. 

அளவு மாற்றம் ====> பண்பு மாற்றம்.

ஒரு பண்பின் அளவு மாற்றம் ====>  இன்னொரு பண்பு 

அதிகரிப்பதை அளக்க அலகுகள் வைத்திருக்கிறோம்.

பொருளின் பண்புமாற்றம் என்பது அதன் எல்லாப் பண்புகளும் மாறுவதல்ல. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பண்புகள் மாறும். பொதுப்பண்புகளும் இருக்கும். உதாரணத்துக்கு பனிக்கட்டிக்கும், நீராவிக்கும் வெப்ப உள்ளுறை உண்டு. ஒரே அலகினால் (வெப்பநிலை) அளக்க முடியும். 

இயக்கத்திலிருந்தே நாம் அனைத்தையும் வரைவு செய்தோம்.

இயக்கத்தின் அதி உள்ளார்ந்த பண்பு சுயமுன்னேற்றம். அது இந்தபதிவில் நான் கொஞ்சம் இலகுபடுத்தி எழுதிக் கொண்டிருப்பது போல சுயமுரண் அல்ல. மற்றைய பதிவை வாசித்து அறியலாம்.

இயக்கத்திலிருந்து உருவான அனைத்திலும் எல்லாவித பண்புமாற்றங்களிலும் மாறாத பண்பாக இயக்கமும், பண்புமாற்றப் பண்பும் இருக்கின்றன. 

எல்லாமும் எல்லாவற்றுடனும் தொடர்புபட்டதாக இருக்கின்றன (நியதிவாதமல்ல). தொடர்பு சாத்தியப்பாடுகளின் வழியிலானது. 

ஒன்றை வரைவுபடுத்துவது அது தவிர்ந்த ஏனையவற்றையும் வரைவுபடுத்துகிறது. முரண்களாக இருந்தாலும் ஒன்றையொன்று அடையாளப்படுத்துவதில் இணக்கம் காணுவனவாக இருக்கின்றன. 

ஒரு இயக்கம் அதற்கு எதிரானவற்றையும் தோற்றுவிக்கிறது.  முரண் கூறுகளின் எதிர்நிலை, ஒத்த நிலைகளையும் ஏற்படுத்துகிறது. 

கூறுகள் இணைகிற பொழுது அதன் வடிவமும் (மேற்பரப்பும்) உள்ளடக்கமும் முரண்பாடுகளாக இருக்கின்றன. 

சுருங்கச் சொன்னால் எல்லாவித உறவுகளும் முரண்பாடுகளாக, முரண்பாடுகளின் அடிப்படையில் இணக்கமடைகின்றனவாக இருக்கின்றன. 

நோக்கு 

காலம் என்பது இயக்கம் சார்ந்தது. இயக்கத்திலிருந்தே காலம் என்கிற எண்ணக்கரு பிறக்கிறது.

இவ்விதம் வெவ்வேறு சாத்தியங்களில் 'நெடுங்காலம்' இயக்கங்கள் உருவாக்கிய 'நிலைத்த' பண்புகள், பண்புமாற்றங்களைச் சந்தித்து ஒரு கட்டத்தில் இயக்கத்தை எதிர்க்கிற புதியதொரு பொருளாக மாறுகின்றன.

உயிர். 

உயிர் என்பது தமக்குத் தாமே என்று அடைபட்டு 'நோக்கற்றதாக' இருந்த பண்பு (நோக்கு) வெளியே வந்த விபத்து.

உயிர் இயக்கங்களும் ஏனைய நோக்கற்ற இயக்கங்களும் நெடுங்காலம் பல சேர்மானங்களில் உறவாடி, புதிய பண்பேற்றம் நடக்கிறது.

நோக்கை நோக்கத்தக்க சுயபடியேற்றக் கூறு.

தன்னுணர்வுள்ள, தன்னுடைய நோக்கை உணர்ந்து கொண்டு ஆராய்கிற கூறு.

மனிதர்கள்.

இந்தத் தன்னுணர்வுள்ள கூறுகள் தம்மையும், இயற்கையையும் ஆராய ஆரம்பிக்கிறார்கள். 


நிலைப்பின் நிலைப்பு (உறுதியின் உறுதி, assertion of assertion )

ஒழுங்கீன எழுமாற்று இயக்கம் பண்புமாற்றங்களினூடு படியேறி ஒழுங்கைத் தருவது போல, 

சமமற்ற அடிப்படைகளிலிருந்து பண்புமாற்றங்களினூடு படியேறி சமம், சமச்சீர் இவையெல்லாம் வளர்வது போல, 

எதிர்ச்சக்திகள் ஒன்றை ஒன்று அடையாளப்படுத்திக் கூட்டாவது போல,

தனக்குத்தானே இருக்கிற நோக்கற்ற இயக்கம் இடைவிடாத பண்புமாற்றங்களின் விபத்தினூடு நோக்கைத் தருகிறது. 

அதைப் போல நிலைமறுப்பின் நிலைமறுப்பு இயக்கத்தின் தொடர்ந்த பண்புமாற்றம் நிலைப்பின் நிலைப்புக்கான வெளியையும் உருவாக்கிக் கொள்கிறது.

உழைப்புவெளியே மேம்பாடே ஓய்வு வெளியை மேம்படுத்துவது போல,

நிலைமறுப்பின் நிலைமறுப்பினூடுதான் (negation of negation) நிலைப்பின் நிலைப்பைப் (assertion of asseration) புரிந்து கொள்ளவும் செயலாற்றவும் வேண்டும்.

நிலைப்பின் நிலைப்பினூடு பல சீர்திருத்தங்கள் செய்ய முடியும். இவ்விதம் செய்து வருகையில் நிலைப்பின் நிலைப்பு வெளியும் அதிகரித்து வரும்.

நிலைப்பின் நிலைப்பு வெளி அதிகரிக்க வேகத்தைக் காட்டிலும் அதிக மாற்றம் கட்டாயமாகிற பொழுது பெரும் பண்பு மாற்றம் (சமூகப் புரட்சி) நடந்தேறும். 

நிலைமறுப்பின் நிலைமறுப்பு அடிப்படைகளின் மீது கட்டமைந்ததே நிலைப்பின் நிலைப்பு. 

போராட்டங்களால் எதுவும் கிடைக்காது என்கிறகருத்துமுதல்வாதக் கூறை  (assertion of assertion)  முழுவதுமாக இவ்விதம் தோலுரிக்க முடியும். 

ஆனால் அதை ஆழமாகப் புரிந்து செய்ய வேண்டும்.

நிலைப்பின் நிலைப்பின் மீதுதான் நிலைமறுப்பின் நிலைமறுப்புக்கான வெளியும் கட்டமைகிறது. இந்த அவத்தை மறுபடி மறுதலையாக மாறுகிறது. 


- தொடரும் 





முதற்கட்டப் பயிற்சி 


இது வரைக்கும் நாம் பார்த்த தத்துவ அடிப்படைகளைச் சுயபரிசோதனை செய்து கொள்வோம்.

முதற்கட்டமாக சிந்தனைத் தளத்தில் ஆரம்பிக்க வேண்டுகிறேன்.

எங்களுடைய சிந்தனை முறையும் புறநிலையும் முரண்படுகிற பொழுது முரண்மைப் போலிகள் (Paradoxes) தோன்றுகின்றன. 

முரண்பாடுகளை அடிப்படையாக்கிய எங்களது சிந்தனையைக் கொண்டு எல்லாவித முரண்மைப் \ போலிகளையும் உள்ளிணக்கத்தோடு  தீர்க்க முடிய வேண்டும்.

அல்லது தத்துவத்தில் குறை, போதாமை உண்டு. புதுப்பிக்கப்பட வேண்டும். 

தீர்க்கப்பட முடியாத ஒன்றை இனங்காணின் தெரியப்படுத்துங்கள். 



அறிவு வளர்ச்சியை இயங்கியல் கண்ணோட்டத்தில் வரிப்படங்களாக உருவாக்குங்கள்.

கற்றல் செயற்பாடு. சமூகத்திலான அறிவுப் பாய்ச்சலும் அதன் விளைவான பரம்பலும்.

மனித வரலாற்று இயங்கியலில் (வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்பது தவறான பதம்)  இரண்டு பதிவுகளிலும் இருந்து பெற்ற அறிவை உபயோகித்து இயக்கங்களை இனங்காணுங்கள்.

எல்லாவித மனித அறிவுத் துறை, அறிவின் அறிவு, ஏனைய தத்துவங்களை மட்டுக் கட்டி அவற்றின் வளர்ச்சிக்கும் அதனூடு மனித சமூகத்துக்கும் உதவுங்கள்.

பல மணித்துளி தனிப்பட்ட நேரத்தை நான் இயங்கியலைத் திருத்தியமைப்பதிலும் புறவயப்படுத்துவதிலும் செலவளித்துவிட்டேன்.

சில வாரங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளப் போகிறேன்.

இயங்கியலைப் புரிந்து கொண்டு மிகக் காத்திரமான விமர்சனங்களை வைத்து, கருத்து வெளி உழைப்புச் சுரண்டலைக் குறைத்து, கருத்து இயக்க வினைத்திறனை அதிகரிக்க வேண்டுகிறேன்.

Nila
01/03/2018





3 Comments:

At March 2, 2018 at 6:37 AM , Blogger Prithiviraj kulasinghan said...

அன்னம் தண்ணீரைத்தவிர்த்து பாலை மட்டும்(பாலிலேயே தண்ணீர் இருப்பதால் பால் மாவை மட்டும்) எடுப்பதாக வைத்துக்கொண்டாலும் அது நடப்பது பால் நல்லது என்பதாலல்ல. அன்னத்திற்கு அப்போது பால் தேவை என்பதனாலேயே. காகமும் அன்னமும் நீங்களும் நானும் எமக்கு வேண்டுவதை எடுக்கிறோம். மற்றவற்றை நல்லதல்ல அல்லது பொருத்தமற்றது என்று தள்ளிவைக்கிறோம்.
ஆக நல்லது கெட்டது என்று நாம் வகுப்பது சார்புள்ளது தான்.
அன்னமும் காகமும் தமக்கு "நல்லதைத்" தேர்ந்தெடுக்கிறார்கள்.

நீண்ட ஆழமான பதிவு. முழுவதும் கிரகிக்க இன்னமும் நிறைய படிக்க வேண்டும். பின்னர் கருத்திடுகிறேன்.
சிந்தனையை தூண்டும் பதிவு. நன்றி.

 
At March 4, 2018 at 8:13 PM , Blogger Kanarupan said...

There's a strong tendency to derive the theory of everything from this new logic.

This is the first time in history (history of organisms)that dialectics is proven by dialectical logic itself.

This is the first perpetual philosophy and the philosophy of superintelligence.

 
At March 4, 2018 at 8:14 PM , Blogger Kanarupan said...

This comment has been removed by the author.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home